வணக்கம் வாசகர்களே!
ஹாஸ்பிட்டலை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடும் முகுந்த். பதறி துடிக்கும் ஒவியா? அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா? வாங்க 5-வது அத்தியாயத்துக்குள்ள போலாம்.
அதன் பின் அவர்கள் சந்திப்பு நடந்ததா?
வயநாட்டு மலை சரிவில் பாதிக்கப்பட்ட அத்தனை பேரையும் தன்னுள் ஏந்தி கொண்டு அந்த ஹாஸ்பிட்டல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மூன்று நாட்களாய் டாக்டர், நர்ஸ் யாருமே ஓய்வு எடுக்கவில்லை. இரவு பகல் பாராமல் பம்பரமாக அந்த கட்டிடத்தின் பணியாளர்கள் அத்தனை பேருமே நகர்ந்து கொண்டிருந்தனர்.
ICU – வின் முன் ஒரு பெரும் கும்பலே கூடி இருந்தது. தலையை தொங்க விட்டவாறு மகனை தூக்கி வந்த நொடியே சர்க்கரவர்த்தியின் மனம் உடைந்து போனது. கதறி அழுத அவரை தேற்றி உட்கார வைத்து விட்டு நளனும் சங்கீதாவின் கணவரான மதியழகனும் தான் முகுந்தை இந்த ஹாஸ்பிட்டலில் கொண்டு வந்து சேர்த்தனர். முதலுதவி கொடுத்து விட்டு பின் வேறு ஹாஸ்பிட்டல் கொண்டு செல்லலாம் என்பது அவர்களின் திட்டம்.
உள்ளே சிகிட்சை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அதே அறையில் தான் ஓவியாவும் இருந்தாள். அவளுக்கும் தீவிர சிகிட்சை நடந்து கொண்டிருந்தது. வெளியில் அவளின் தாய் தன் இளைய மகள் வைஷ்ணவியோடு கைகள் இரண்டையும் பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
மகளை உயிரோடு மீட்டு விட்டார்கள் என தெரிந்து சந்தோஷப்பட்டாலும், தூக்கி வந்து மூன்று மணி நேரம் தாண்டியும் எந்த பதிலும் சொல்லவில்லையே என்ற பதைபதைப்போடு நின்றிருந்தாள்.மகள், உடல் முழுதும் காயங்களோடு தூக்கி கொண்டு உள் சென்றதே அவள் கண்ணில் இப்போதும் நிறைந்து நின்று, கண்ணீரை வரவழைத்தது.
மூன்று மணி நேரத்தை முழுதாய் பயம் காட்டி விட்டு மெல்லமாய் கண் திறந்தாள் ஓவியா. சுற்றி தெரிந்தவர் என்று யாரும் இல்லை. மலக்க மலக்க இவள் விழிப்பதை பார்த்து அருகில் வந்த நர்ஸ்…
“எப்படிம்மா இருக்கு.”
என அக்கறையாய் விசாரிக்க,
“ம்…”
என தலையாட்டவே முடிந்தது.
“சரி. இரும்மா. உன் பேரன்ஸை கூப்பிடுறேன்.”
என வெளி சென்றவள் அடுத்த நொடியே எழிலரசியோடு உள்ளே வந்தாள். மகளின் கோலம் கண்டு துடித்து போனவளாய் அருகில் வந்தவள், மகள் கையை எடுத்து முத்தம் கொடுத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்த, ஓவியாவின் கண் ஓரம் நனைந்தது.
அவசரமாக அதை தட்டி விட்ட எழிலரசி,
“எதுக்கு இப்போ அழுறா? அதான் அந்த முனீஸ்வரன் ஒரு ஆபத்தும் ஏற்படாம உன்னை கொண்டு வந்து என் கையில கொடுத்துட்டானே. அவனை கும்பிட்டு வந்தது சோடை போகல. இல்லனா இப்படி ஒரு துயர்ல இருந்து மீண்டு வந்திருப்பியா? கும்பிட்டதும் அவன் உன் கூடவே வந்து உன்னை காப்பாத்தி கூட்டிட்டு வந்து என்கிட்ட கொடுத்திருக்கான்.
கண் கலங்கி நெஞ்சுருகி தாய் சொன்னதுமே சட்டென ஒவியாவில் வந்து போனது முகுந்தன் முகம் தான். முனீஸ்வரன். என்னை காப்பாத்துனது முனீஸ்வரன்னா? அவன் தான் முனீஸ்வரன்.
எண்ணும் போதே முகத்தில் மென் நகை மலர்ந்தது. அவன் மட்டும் தன்னை அந்த மேஜைக்குள் கொண்டு போகாமல் இருந்திருந்தால், காங்கிரீட் சுவர் தலையில் விழுந்து அந்நேரமே மரணித்து போயிருப்பேன். அடுத்து மேஜை அடியில் இருந்து தப்பி வந்த போது அவன் தோள் கொடுத்து தன்னை காக்கா விட்டால் அந்நேரம் அந்த
துண்டு தன் தலையில் விழுந்து பதம் பார்த்திருக்கும். நொடி பொழுதில் முகுந்தன் முனீஸ்வரன் கோலத்தில் கண்ணுக்குள் தெரிய,
அவள் கண் கலங்கி ததும்பிற்று, கூடவே அவனை பார்க்கும் ஆவலில் அவள் விழி பரபரத்தது.
“என்னம்மா…”
தலையை தடவியவாறு கேட்ட தாயின் முகம் பார்க்காமல் சுற்றி சுற்றி பார்வையை செலுத்தியவள், அவள் பார்வை பட்ட எந்த இடத்திலும் அவன் முகம் இல்லாதிருக்க கண்டதும் சோர்ந்து தளர்ந்து போய் கண் மூடினாள்.
அதே நேரம் நேரம் அவளை நெருங்கி வந்த டாக்டர்.
“எப்படிம்மா… உடம்பு வலி எதுவும் இருக்கா…”
என கேட்ட போது தான் தன் உடல் வலியே அவளுக்கு உறுத்தியது. உடலை ஆட்ட முடியவில்லை. உடலில் பட்ட கீறல்களும், காயங்களும் புண்ணாக வலித்தது. தலையை அசைக்க முடிந்த அளவு உடலை ஆட்ட முடியவில்லை. அதிலும் அந்த கம்பியை இழுத்த போது பாய்ந்து வந்து தன் நெற்றியில் அடித்த கம்பி ஒன்றால் ஏற்பட்டிருந்த காயம் தலையையே வலிக்க செய்தது.
அது மொத்தத்தையும் டாக்டரிடம் சொல்லி விட்டு அப்படியே கண்மூடி விட்டாள் ஓவியா. டாக்டர் சில மாத்திரையும் ஊசிக்கான மருந்தையும் எழுதி கொடுத்து விட்டு நகர்ந்த போது, எழிலரசி, மகளின் அருகில் வந்து அமர்ந்தாள். இன்னுமே அவள் கண்கள் கலங்கி போய் தான் இருந்தது.
மூன்று நாளாய் அலற விட்டல்லவா இன்று கண் திறந்திருக்கிறாள். அவளுக்கு இன்னுமே அப்பயம் போகவில்லை. எங்கே கணவரை போல இவளும் அழ வைத்து விடுவாளோ என்ற பயம் அவளின் அடி ஆழம் வரை இருந்தது. கண்ணீர் மல்க தன்னை ஆவலோடு தினமும் பார்க்கும் கணவரிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், மூன்று நாளாய் மகளை பற்றிய எந்த விசயமும் தெரிந்து கொள்ள முடியாமல் எழிலரசி ரொம்பவே தவித்து போனாள்.
இயலாதவர்களுக்கு இறைவனே துணை என்பது போல கடவுளுக்கு லட்சம் தருவதாக சொல்லியே வேண்டிக் கொண்டாள். கணவருக்கு செய்தது போல என்னவோ அந்த கடவுள் மகள் விசயத்தில் அவளை தண்டிக்கவில்லை. பிணமாக மீட்டு கொண்டு வந்த இடத்தில் தன் மகளை உயிரோடு மீட்டு கொண்டு வந்ததே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
அந்த நிறைவோடு நின்றவளை மூன்று மணி நேரமாய் கண் விழிக்காமல் தண்டித்து விட்டவள் கண் திறந்து விட்டாள் என்று சொன்ன நொடி தான் போன உசுரே திரும்ப வந்தது. எழிலரசி, அரிசந்திரன் தம்பதிக்கு மூன்று மகள்கள். மூத்தவள் தான் இந்த ஓவியா. இன்று அந்த குடும்பம் மூன்று வேளை பசி இல்லாமல் உண்ண காரணமே இந்த ஓவியா தான். இவள் பணிக்கு போன பிறகு தான் அந்த குடும்பம் தலைநிமிரவே ஆரம்பித்தது. அந்த வீட்டிற்கு குடும்ப தலைவன் அவள் புருஷன் அல்ல. அவள் மகள் தான்.
அந்த அளவு குடும்பத்திற்கு எல்லாமுமாய் இருப்பவள். அவளை பற்றி சுற்றிய அந்த குடும்ப ராட்டினம் அந்த மலை சரிவால் மாண்டு விடுமோ என்று தான் நினைத்தாள். ஆனால் மறுபடியும் சுழல வைத்து விட்டான் அந்த ஆண்டவன். எப்படியான கண்டத்தில் இருந்து மகள் தப்பி வந்திருக்கிறாள். ஊரே பிண குவியலில் ஒலமிட, அவள் வீட்டில் அந்த சத்தம் கேட்காமல் கடவுள் காப்பாற்றி விட்டார் என்றே நம்பினாள்.
“வைஷ்சு நீ அக்கா பக்கத்துலயே இரு. வேற எங்கும் போயிட கூடாது. நான் முனீஸ்வரன் கோயிலுக்கு போய் முந்தாணையில முடிஞ்சி வச்ச காசை காணிக்கை செலுத்திட்டு, அப்பாவை ஒரு முறை பார்த்துட்டு, அவருக்கு கொடுக்க வேண்டிய மாத்திரை மருந்து எல்லாம் கொடுத்துட்டு வந்திடுறேன். அக்கா நல்லா தூங்கி எழும்பட்டும். அவளை எழுப்பாதே.
என்ற எழிலரசி மகள் நெற்றியில் முத்தம் ஒன்று வைத்து விட்டு வெளியேறி விட, வைஷ்ணவி செல்லை எடுத்து நோண்டியவாறு ஓவியா பக்கத்தில் அமர்ந்து விட்டாள். தாய் நினைப்பது போல பெண்ணவளுக்கு உறக்கம் வரவில்லை. வலியில் கண்மூடி இருந்தாள் அவ்வளவு தான். ஆனாலும் மூடிய கண்ணுக்குள் விடாமல் முகுந்தனே வந்தான். ஏன் அப்படி என்று தெரியவில்லை. தன்னை நெஞ்சோடு அணைத்து பிடித்தவாறு அந்த மேஜைக்கு அடியில் கொண்டு போய் பத்திரப்படுத்தியதில் இருந்து இந்த மூன்று நாள் அவனோட பயணமே திரும்ப திரும்ப முழைத்து வந்தது.
அவனுடன் அவள் இருந்த ஒவ்வொரு நொடியும் அவன் பேச்சு அவளை ஆத்திரப்பட தான் வைத்தது. ஆனால் அது அத்தனையும் தன் மேல் உள்ள கரிசனையால் வந்த வார்த்தைகள் என இப்போது யோசிக்கும் போது தான் தெரிய வந்தது. தெரிந்த மாத்திரத்தில் இரக்கம் சுரந்தது. அந்த இரக்கம் அவனை பார்க்கும் ஆவலை கொடுத்தது. அந்த ஆவல் அவன் நலம் பற்றி அறிய அவள் மனதை தூண்டியது.
“யாரை கேட்பது? எப்படி கேட்பது?”
எதுவும் தெரியவில்லை.
“எப்படியிருப்பார்? அவருக்கு எதுவும் ஆகிவிடவில்லையே” என்ற தவிப்பே மேலெழுந்து வந்தது.
அந்த எண்ணம் வந்ததுமே சட்டென கண்கள் திறந்து கொண்டன. திறந்தவள் விழிகள் செல்லில் எதையோ ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த தங்கையின் மேல் தான் விழுந்தது.
“என்னக்கா எதுவும் வேணுமா?”
ஆர்வமாக ஓடி வந்து கேட்ட தங்கையின் விழியை பார்த்தவள்,
“இவளிடம் கேட்கலாமா?”
“இல்லை. வேணாம். கேட்டால் என்னை பற்றி என்ன நினைப்பாள்.”
எண்ணியதுமே வேகமாக தலையாட்டினாள். கூடவே அவள் கண்கள் பரபரக்க ஆரம்பிக்க,
“யாரை தேடுறா? திலகாவையா?”
என்ற போது தான். தான் அவளை சுத்தமாக மறந்து விட்டதே அவள் நியாபகத்துக்கு வந்தது. ஐயோ அவளும் இந்த இடிபாடுகளுல சிக்கி இருப்பாளே. சட்டென விழி பெரிதாக அதிர்வோடு விரிய, அதை பார்த்த வைஷ்ணவி,
“அவங்களுக்கு எதுவுமாகலக்கா. பக்கத்து அறையில தான் இருக்காங்க. உன் முன்னாலயே மீட்பு படை அவளை கூட்டிட்டு வந்து சேர்த்திடுச்சி. அவங்க சொல்லி தான் உன்னை அந்த பாதாளத்துல இருந்து கொண்டு வந்து சேர்த்தாங்க.”
என்றதும், மனது தெளிவாக பழைய படி கண்களை மூடிக் கொண்டாள். மூடிய கண்ணுக்குள் மறுபடியும் முகுந்தன் வந்தான்.
“ உன்னை இரவு பகல் பார்க்காமல் கண்ணுக்குள்ள வச்சி பார்த்தேன். நீ கண் விழிச்சும் என்னை வந்து பார்க்கலியே…”
அவனே கேட்டான்.
சட்டென கண் திறந்தாள். இதற்கு மேல் அவனை பற்றி அறியாமல் தூங்க முடியாது என தோன்றிற்று…
மெல்ல நர்ஸை அழைத்தாள். அவளும் நெருங்கி வந்தாள். வந்த பிறகு தான் எப்படி கேட்பது என்ற எண்ணமே வந்தது.
மூன்று இரவும் மூன்று பகலும் அவனுடன் இருந்திருக்கிறாள். ஆனாலும் அவனை பற்றி எதுவும் அவளுக்கு தெரியாதே. அவன் யார்? அவன் பெயர் என்ன? என்று கூட தெரியாதே. இந்த இலட்சணத்துல எப்படி போய் கேட்கிறது.
தடுமாறியவள் தவிப்பை பார்த்தவள்.
“என்னம்மா உடம்புக்கு எதுவாவது செய்யுதா? டாக்டரை கூட்டிட்டு வரவா?”
என கரிச்சனையோடு வினவ, அந்த நாற்பது வயது பெண்மணியை பரிதாபமாக பார்த்தாள். அவரின் கரிசனையும் அன்பும் அவளை என்னவோ செய்தது.
“இல்லையம்மா. நான் நன்றாக தான் இருக்கிறேன்.” என்றவள் மறுபடியும் திரும்பி படுத்து கொள்ள, அந்த நர்ஸ்சுமே குழப்பமாக தான் சென்றாள். நர்ஸ் சென்றதும் வைஷ்ணவி அக்காவை புரியாமல் பார்த்தாள்,குழம்பி தவிக்கும் அக்காவை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் எதுவும் கேட்கவில்லை. என்ன தான் அவர்கள் அக்கா தங்கை என்றாலும் வைஷ்ணவிக்கு அக்காவிடம் பேசுவது என்றால் பயம் தான். காயத்ரியிடம் பேசி விடுவாள். மூத்தவள் இவளிடம் பேசுவது என்றால் ஒரு நடுக்கம் தான்.
வீட்டு பொறுப்பை மொத்தமாய் எடுத்து நடத்தும் மூத்தவர் மேல் வரும் பயம் கலந்த மரியாதை தான் அது. அதற்காக அக்கா மேல் பாசம் இல்லை என்று அர்த்தம் இல்லை. ஓவியாவை வைஷ்ணவிக்கு ரொம்ப பிடிக்கும். இன்று அவள் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள் என்றால் அதற்கு காரணமே ஓவியா தான்.
பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்ட இவளை எழிலரசியிடம் சண்டை போட்டு ஒரு வருடம் கழித்து பதினொராம் வகுப்பில் சேர்த்து விட்டவள் அவள் அக்கா ஓவியா தான். அவள் படிப்பு விசயத்தை மிக அக்கறையாயும் குடும்பத்தை நேர்த்தியாக வழி நடத்துவதின் கம்பீரமும் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். தூரமாய் இருந்து ரசிப்பாள். நெருங்கி செல்ல பயப்படுவாள். அதே பயத்தோடு தான் இன்றும் ஒதுங்கி நின்று அவளையே பார்த்தாள்.
“புரியவில்லை தான். ஆனாலும் அக்கா யாரையோ தேடுகிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.” நேரே எழுந்து ஓடி திலகா அறைக்கு தான் வந்தாள்.
மொத்தமாய் போர்வைக்குள் சுருண்டு, வாடி வதங்கி கிடந்தவள் அருகில் ஒடி வரவும்,
“என்னடி அக்கா எப்படி இருக்குறா?”
அந்த சோர்விலும், தாங்க முடியா வலியிலும் அவளை பற்றி தான் கேட்டாள் திலகா. திலகா, ஓவியா நட்பு அத்துணை ஆழமானது. வாழ்வில் அடிப்பட்ட குடும்பத்தில் இருந்து இருவரும் வந்ததாலோ என்னவோ வாழ்வில் பல வேளைகளில் இவளின் வலிக்கு அவள் மருந்தாகவும், அவளின் வலிக்கு இவள் மருந்தாகவும் தான் வாழ்க்கையை நகர்த்தி வந்திருக்கிறார்கள்.
“அக்கா நல்லா தான் இருக்காங்க. ஆனா யாரையோ தேடுறாங்க. எனக்கு உங்களையா இருக்குமோனு தோணுது.”
“ம்… என்னை பற்றி சொன்னியா?”
“எங்கணு கேட்டுச்சு. பக்கத்து அறையிலணு சொன்னேன். ஆனாலும் தேடுது.”
“ம்… என் விசயம் இப்போ அக்காளுக்கு தெரிய வேணாம். அவளுக்கு பூரணமா குணமான பின்னால சொல்லிக்கலாம்.”
“ம்…”
என தலையசைத்தவளை,
“ சரி. நீ போ…”
ஓவியா அறைக்கு அனுப்பி விட்டு மெல்லமாய் கட்டிலில் சரிந்தாள். கண்கள் சட்டென கட்டி கொண்டன. மெல்லமாய் குனிந்து தன் காலை பார்த்தாள். இரண்டு கால்களும் முட்டுக்கு கீழே துண்டிக்கப்பட்டு காட்சி தந்தது.
உசுரை காப்பாற்றணும்ணா அவங்க காலை எடுத்து தான் ஆகணும். தான் எங்கோ தொலைந்து போன போது யாரோ யாரிடமோ சொல்வது போல கேட்டது. கூடவே தாயின் தாங்க முடியாத கதறலும் கேட்டது. பின் நிசப்தம். எப்போது மறுபடியும் நியாபகம் வந்ததோ அப்போது இரண்டு காலையும் இழந்திருப்பது தெரிந்தது. கதறி துடித்தாள். பொறுக்க முடியவில்லை. எப்படி முடியும். அவள் வாழ்வையே அந்த மலை சரிவு தகர்த்து விட்டது அல்லவா?
அழுது துடித்தவளை அள்ளி அணைந்து கொண்டாள் கோசலை. அவள் கண்களும் கலங்கி வடிந்து கொண்டு தான் இருந்தது. அவள் வாழ்வில் எப்படியான ஒரு அடி இது. மரணத்தோடு போராடி மகளை மீட்டு எடுத்து விட்டேன் என்று சந்தோஷப்பட முடியாமல் அந்த ஆண்டவன் அவள் இரண்டு காலையும் பறித்து விட்டானே. என்று இவள் முன் வருத்தப்படவும் முடியாமல் துடித்து துவண்டு போனது கோசலை தான். கடவுளை தான் மனதுக்குள் பழித்தாள்.
அவனுக்கு அப்படி என் மேல் என்ன கோபம். பிறந்த போதே தாயை பறித்தான். வளரும் முன் தந்தையை எடுத்து கொண்டான். காலம் முழுதும் கஞ்சி ஊத்த முடியாது என தள்ளி விட்ட இடத்தில் கட்டிய மூன்றே மாதத்தில் வயிற்றில் இந்த கருவை உற்பத்தி செய்து விட்டு எவளோடோ காணாமல் போன புருஷனை கொடுத்தான். அதிலிருந்து மீண்டு வர, அல்லல்பட்டு, அவமானப்பட்டு அந்த கருவை குழந்தையாக்கி, வளர்த்து ஆளாக்கி விட்டு, அப்படா இனி வாழ்வில் விடிவு தான் என நிம்மதியோடு இருந்தால்…
அந்த ஆண்டவன் என்ன? மகள் வாழ்விலும் விளையாடி விட்டான்.
நினைக்க நினைக்க நெஞ்சம் எரிந்தது.
அடித்தவர் வாழ்விலே திரும்ப திரும்ப அடிப்பதன் காரணம் தான் புரியவில்லை.
இன்னும் கொஞ்ச காலம் தாம்மா. உனக்கு இந்த வலி. அதுக்கு பிறகு உன்னை நான் பாத்துக்குவேன்.
என கலங்கும் போதெல்லாம் கைபிடித்து நெஞ்சம் நிறைய அன்போடு சொன்ன மகள் இன்று இன்னும் இவள் பார்க்கும் நிலையில் . கண்கள் கரித்து கொண்டு வந்தது. உள்ளம் புண்ணாக வலித்தது. உலகத்தில் உள்ள அத்தனை தெய்வங்களையும் சபித்தவாறு மகளை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தாள். தாயின் நிற்காத கண்ணீரே அவளை உடைந்து போக வைத்தது.
சின்ன வயதில் இருந்து இந்த வயது வரை அவளுள் தான் எத்தனை எத்தனை ஆசைகள். எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள், அத்தனையும் ஒரே நொடியில் அழித்து விட்டதே இந்த வாழ்க்கை.
தந்தை இன்றி தான் பட்ட வலிகளை எல்லாம் தன் வலியாக்கி வாழ்ந்த தாயை உட்கார வைத்து சோறு போட நான் ரெடியான நேரமா இப்படி ஒன்று நடக்க வேண்டும். இனியும் அவர் தயவிலா நான் உயிர் வாழ வேண்டும். இதற்கு இந்த கடவுள் இந்த உசுரை தராமலே இருந்திருக்கலாம். எண்ணும் போதே அழுகை பொத்து கொண்டு வந்தது. சோர்ந்து போன மகளை தேற்றி அன்று உறங்க வைக்கவே கோசலை ரொம்ப கஷ்டப்பட்டாள். ஆனால் தூங்கி எழுந்த பின் அவள் ஒரு பொட்டு அளவு கூட அழவோ வருத்தப்படவோ இல்லை.
நடிக்கிறாள் என்பது கோசலைக்கு தெரிந்தது. தனக்காக தன் முன்னால் நடிப்பதாக தெரிந்தாலும் அவளும் அதன் பின் மகள் முன் அழவில்லை. நேற்று வரை அவளுடன் தான் இருந்தாள். ஆனால் இன்று கிளம்பி விட்டிருந்தாள். காரணம் அவளின் வேலைகார வாழ்வு அவளை அழைத்தது.
அம்மா… இந்த ஒரு மாசமும் தான் நீ இனி வேலைக்கு போகணும். அதன் பிறகு நான் கொடுக்கிற சம்பளத்தை வச்சி உனக்கு பிடிச்சதை வாங்கி சாப்பிட்டுட்டு சந்தோஷமா இருக்கணும். புரியுதா?
போன மாதம் சம்பளத்தை வாங்கி கொண்டு வந்து கையில் கொடுத்து விட்டு மகள் சொன்னது நெஞ்சில் வந்து அறுத்தது. பாத்திரம் கழுவ கழுவ விடாமல் என்னவெல்லாமோ எண்ணங்கள் வந்து நிற்க, கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
அவளின் கண்ணீரை பார்த்து இரக்கம் கொண்டாளோ என்னவோ, அவளுக்கு சம்பளம் கொடுக்கும் அந்த வீட்டம்மா நெருங்கி வந்து, சில ஆயிரங்களை கையில் திணித்து விட்டு,
“நீ… ஒரு வாரம் லீவு எடுத்துக்க. உன் பொண்ணை கூட இருந்து கவனிச்சி, ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்த பிறகு வா.”
என அனுப்பி வைக்க,
அவளை கையெடுத்து கும்பிட்டாள் கோசலை. மகிழ்வில் கண்கள் நிறைந்து போயிற்று. சாயுங்காலம் வரும் தாய் மதியமே வர, யோசனையோடு அவளை பார்த்தாள் திலகா.
“என்னம்மா…”
என்ற மகளை நிமிர்ந்து பார்த்த கோசலை, நடந்ததை சொன்னாள்.
“ம்… சாப்பிட்டியா?”
என்றதும் உங்கள் குமுற அவளை பார்த்தவள்,
“இப்போ சாப்பாடு ஒன்றும் தான் குறைவு.”
என உடைந்து அழ தயாராக,
“எதுக்கு இப்போ இந்த அழுகை. மறுபடியும் பாரமாகி போனேன்னா?”
உடைந்து சொன்னவளின் வாயை பொத்தியவள்,
“என்னடி பேசுறா நீ…”
“இல்ல தானே. அப்புறம் எதுக்கு அழுகை. பசிக்குது. முதல்ல சாப்பிட எதாவது தா .”
என்றதும் கொண்டு வந்த சாப்பாட்டை அள்ளி கொடுக்க ஆரம்பிக்க, தாயின் முகத்தையே விழி எடுக்காமல் பார்த்தவாறு வாய் பிளந்து வாங்கி கொண்டாள் திலகா.
“ஓவியாவுக்கு எப்படிம்மா இருக்கு. நீ போய் பார்த்தியா? நல்லா இருக்கா தானே?
“ ம்… அவளுக்கு என்ன? நல்லா தான் இருக்கா. உன் அளவு ஆண்டவன் அவளை சோதிக்கல. உடம்புல சின்ன சின்ன சிறாப்பு தான். நாலு நாள் சாப்பிடாத மயக்கம் மட்டும் தான்.”
என்றவள் கண்கள் நீரை கட்டிக் கொள்ள,
“அம்மா… இப்படியே அவள் முன்னால அழுதே காட்டி கொடுத்திடாதுங்க. அவா தாங்கிக்க மாட்டா.”
“எத்தனை நாளுக்கு மறைக்க போறா? எப்படியும் ஒரு நாள் தெரிஞ்சி தானே ஆகும்.”
“ ம்… தெரிஞ்சி தான் ஆகும். அப்போ பாத்துக்கலாம்.”
என்ற மகளை ஆசையாக தடவியவள்,
“என்னமோடி மனசே தாங்கல. எப்படி இந்த உலகத்துல இரண்டு கால் இல்லாம வாழப் போறா? நாம நல்லாயிருக்கும் போதே உன் அப்பன் கண்டுக்கல. தனியா கிடந்து செத்தோம். இப்போ கால் இல்லாத உன்னை நான் எப்படிடீ பாத்துக்க போறேன்.”
என்றவாறே கவலையோடு தன் முகம் பார்த்த தாயிடம் எதுவும் பேசாமல் தலை குனிந்தாள்.
அதே நேரம்,
தன்னை நெருங்கி வந்த தங்கை காயத்ரியின் முகத்தை ஆர்வமாக பார்த்தாள் ஓவியா. தன்னை ஆர்வமாக பார்க்கும் தமைக்கையின் அருகில் ஆறுதலாக நெருங்கி போய் அமர்ந்தவளிடம்,
“திலகா… திலகா… எப்படியிருக்கா? அவா ஏன் என்னை பார்க்க வரல,”
என்றாள் மென் குரலில் ஓவியா,
“ம்… அவங்க நல்லாயிருக்காங்க. ஆனா எழும்பி வர முடியாதபடி காலுல ஒரு சின்ன அடி. சரியாக இரண்டு வாரம் ஆகும்.”
“கால்ல அடியா?”
என கலவரமானவளை சமாதானப்படுத்தும் நோக்கோடு,
“நீ அதிர்ச்சியாகும் அளவு எதுவுமில்ல. சீக்கிரம் சரி ஆகிடும்.”
என்றதும் சிறிது நார்மல் ஆனவள் போல்
“ம்…ம்… அப்படியா? நீ கூடவே இருந்து அவளையும் பாத்துக்க. கோசலை அம்மாவால தனியா பாத்துக்க முடியாது.”
“ம்… நீ தூங்கு. நாங்க பாத்துக்குறோம்.”
என்றதும் ஒரு நொடி அமைதியானவள், மறுபடியும் எதையோ கேட்கும் முனைப்பில்,
“அப்புறம்…”
என ஆர்வமாக அவளை பார்க்க,
“சொல்லுக்கா . அப்புறம் என்ன? ஏதாவது வேணுமா? தண்ணீர் தரவா?”
என எழுந்து கொள்ள அவள் முயல .
“இல்ல. எனக்கு எதுவும் வேணாம். ஆனா…
“என்ன அக்கா ஆனா…”
“இல்ல…என் கூட அடிப்பட்டு வந்தாரே அவருக்கு… அவருக்கு…”
“யாரைக்கா சொல்லுறா? உன் கூட அப்படி யாரும் வரலியே.”
“வரலியா? அவர் இல்லாம நான் எப்படி?”
“நான் எப்படினா? எனக்கு புரியல.”
“என்னை தனியாவா கொண்டு வந்தாங்க.”
“ஆமா…”
“என் கூட யாரும் வரலியா?”
“இல்லக்கா…”
என்றதும் உள்ளம் உடைந்து போனவளாய்… மலக்க மலக்க விழித்தாள். அது எப்படி அவர் இல்லாம நான் மட்டும். எண்ணும் போதே அந்த இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கி கொண்ட கடைசி நாள் நினைவு வர, “நாலு நாள் எதுவும் சாப்பிடாம நான் மயங்கியிருக்கலாம். அவருக்கு தான் கிடைச்ச எல்லாத்தையும் கொடுத்தேனே. அப்படியிருக்க என்னை காப்பாத்துன இடத்துல அவர் இல்லாம எப்படி?” ஒரு வேளை நான் மயங்கியதும் என்னை அப்படியே போட்டு விட்டு போய் விட்டாரோ.
எண்ணமே மனதுள் கசப்பை தட்ட
யோசனையோடு கண்மூடி கொண்டாள்.
“ சே… சே… அப்படி எல்லாம் இருக்காது. எவ்வளவு பாதுகாப்பா என்னை ஒவ்வொரு நொடியும் பாத்துகிட்டார். அதட்டி பேசுனதே நான் எதுலயும் மாட்டிக்க கூடாதுணு தானே. அப்படினா என் கூட அவர் இல்லாம எப்படி?”
பேதை பெண்ணுக்கு தெரியவில்லை. அவனை காப்பாற்ற போராடிய இடத்தில் இருந்து தான் இவளை தூக்கி வந்திருந்தார்கள் என்று. அவனுடன் மட்டும் இவள் இல்லாமல் தனித்து எங்காவது மாட்டி இருந்தால் அந்த இடிபாடுகளுக்குள்ளே சுயநினைவிழந்து மாண்டிருப்பாள்.
இந்தியாவில் விரல் விட்டு எண்ண கூடிய கோடீஸ்வரனான சக்கரவர்த்தியின் ஒரே மகனுடன் தான் தன் வாழ்க்கை பயணத்தில் மூன்று நாளை கழித்தோம் என்பதும், அவனை தேடி வந்த இடத்தில் தான் தன்னையும் மீட்டெடுத்தார்கள் என்பதும், அப்படி துவண்டு போய் மீட்டெடுத்தவனை முதல் உதவி கொடுத்து பின் சகல வசதியோடு கூடிய ஆம்புலன்ஸில் மெட்ராஸ்க்கு கொண்டு போய் விட்டார்கள் என்பதையும் பாவம் அவளிடம் சொல்ல யாருமே இல்லை.
கண்மூடி இருந்த நொடிகள் எல்லாம் அவன் நியாபகங்களிலே தொலைத்தாள். கண் திறந்த பொழுதில் எல்லாம் அவன் உரு தேடியே அலைந்தாள். முழுதாய் ஐந்து நாள் முடிந்தும் அவனை பார்த்து விடும் அவளின் கனவை யாரும் நிறைவேற்றவே இல்லை.அடுத்து வந்த நொடிகள் எல்லாம் ஓவியாவுக்கு அவஸ்தையாகவே போனது. யாரிடம் கேட்பது. அவர் நலம் பற்றி எப்படி அறிவது. எதுவும் தெரியவில்லை.
ஆறாம் நாள் காலையில் தான் அவளை அறைக்கு அனுப்பினார்கள். தாயை வற்புறுத்தி தான் திலகாவை பார்க்க அழைத்து போக சொன்னாள். போகும் போது கூட அந்த ஹாஸ்பிட்டலின் மூலை முடுக்கெல்லாம் அவளின் கண்கள் அவனை தான் தேடியது. ஆனால் அந்த மாயகள்வனின் உருவம் தான் அவள் பார்வையில் விழவே இல்லை. அவளுக்கு அவனை பார்க்க வேண்டும் என்றில்லை. அவன் நலமாக இருக்கிறான் என்ற செய்தியை மட்டுமாவது அவள் செவி கேட்டாக வேண்டும் என துடித்து நின்றது அவள் செவி.
அவளும் யாரிடம் கேட்பாள். மூன்று நாள் முழுதாய் அவனுடன் இருந்தாள். ஆனாலும் அவனை பற்றி அவளுக்கு என்ன தெரியும். பெயர் கூட தெரிந்து கொள்ளாமல் அவனை எப்படி விசாரிப்பது. அந்த கும்மிருட்டில் தவிப்பும், வலியுமாக நொடியை கடத்தியவளுக்கு அவனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே வரவில்லை. கடைசியாக இவர்கள் இருவரையும் யார் மீட்டெடுத்து கொண்டு வந்தார்கள் என்பது கூட இவளுக்கு தெரியாது. இந்த லட்சணத்தில் யாரிடம் போய் விசாரிப்பாள்.
வாசலிலோ வராண்டாவிலோ அவன் முகம் தென்பட்டு விட வேண்டும் என சாமியை வேண்டி கொண்டே தான் பார்வையால் துழாவினாள். ஆனால் திலகா அட்மிட்டாகி இருந்த அறைக்குள் நுழைந்தும் அவள் கண்ணில் அவன் தட்டுபடவே இல்லை.
தன்னை பார்க்க வந்தும் தன் நிலை பற்றி விசாரிக்காமல் ஏதோ ஒரு உலகில் இருப்பது போல இருந்த தோழியை வினோதமாய் பார்த்த திலகா.
“என்னடி? உன் பார்வையே சரியில்லயே. நீ… நீ… யாரை தேடுறா?”
என உலுக்கியவளை வினோதமாக ஒரு வித பதட்டத்தோடு எதிர்கொண்டவள்,
“இல்லயே… நான்… நான் யாரை தேடுறேன்.”
என்றதும் நெற்றி சுருங்க அவளை பார்த்தவள், குழப்பத்தின் உச்சத்தில்…
“அதை தான் நான் கேட்கிறேன். பார்க்க வந்தது என்னை. ஆனா நீயும் இங்க இல்லை. உன் பார்வையும் இங்க இல்லயே.”
என அவளை ஊடுருவி பார்க்க,
தோழி மனதை சரியாக கணித்து விட்டதை கண்டதும். மொத்தமாய் தடுமாறியவள்,
“அப்படி எல்லாம் இல்ல… நான்… நான்… உன்னை தான் பார்க்க வந்தேன்.”
“அப்போ என்னை பாரு.”
என அவள் முகம் தாங்கி சொல்ல, சட்டென ஓவியா கண்களில் இருந்து கண்ணீர் பொங்கிற்று.
“ஏய்… எதுக்கு இப்போ அழுறா?”
“எனக்கு பார்க்கணும். ஒரு முறை. ஒரே ஒரு முறை பார்க்கணும்.”
விம்மலோடு கண்ணில் நீர் கோர்த்து சொன்ன தோழியை வினோதமாக பார்த்தவள்,
“யாரை…”
என விழி உயர்த்தி கேட்க, அவள் விழியை சங்கடமாக பார்த்தவள்,
“அ… அந்த … அந்த…”
அவள் சொல்ல முடியாமல் திணற, சட்டென அவள் மனதில் எதுவோ தட்டுபட,
“நெடுமரத்தையா?”
என கேட்டு விட, தோழியை அதிர்வோடு பார்த்தவள் மெல்ல தலையை கவிழ்ந்து கொண்டே,
“ம்…”
என இரு பக்கமும் ஆட்டினாள். அவளின் கோலத்தை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவள் பிசிறடித்த குரலில்,
“வேணாம்டி. அது ரொம்ப பெரிய இடம். அவன் பக்கத்துல கூட போக முடியாத அளவு பெரிய இடம்.”
என்றதும் சட்டென பார்வையை எங்கெங்கோ செலுத்தியவளாக,
“தெரியும். ஆனா நானும் பக்கத்துல போக ஆசைப்படல. அவர் எப்படி இருக்கார்ணு தெரிஞ்சா போதும்.”
என்றாள் ஐந்து நாள் தவிப்பை மறைத்தவளாக, அவளின் தடுமாற்றத்தால் குழப்பமானவள்,
“அவனுக்கென்ன நல்லா தான் இருப்பான். உன்னை போல என்னை போல லோக்கல் டாக்டர் அவனுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கல. மெட்ராஸ்ல இருந்து டாக்டஸை கூட்டிட்டு வந்து ட்ரீட்மென்ட் பாத்திருக்காங்க. அப்புறம் எப்படி குணமாகாம இருப்பான்.”
என்றதும்
“ஒ…”
என்றாள் உணர்வு துடைக்கப்பட்ட குரலில். அவள் குரலின் சுருதி இறங்கி போய் இருக்க கண்டதும்,
“என்ன ஒ?”
என அதட்டி கேட்க,
“அப்படினா குணமாகிட்டாரு தானே.”
என்றாள் பட்டும் படாமலும்.
“அப்படி தான் நினைக்கிறேன். குணமாகலனா ஊருக்கு கிளம்பி போயிருக்க மாட்டார் இல்லயா?”
என்றாள் அவளை ஊடுருவி பார்த்தவாறு,
“என்ன? ஊருக்கு போயிட்டாரா?”
அதிர்ந்து கேட்டவளை புருவ முடிச்சோடு பார்த்தவள்,
“அதுக்கு ஏண்டி நீ அதிர்ச்சியாகுறா?”
என்றாள் புரிந்து கொள்ள முடியாதவளாய்,
“அது… இல்ல… போயிட்டாராணு கேட்டேன்.”
என்றாள் தன் மொத்த தவிப்பையும் மறைத்தவளாக,
“போயிட்டாங்கணு தான் சரசக்கா சொன்னாங்க. போகும் போது ஒரு நூறு ரூபாய் கட்டையே எடுத்து சரசு அக்காவுக்கு கொடுத்திருக்காங்க.”
என்றதும் புரியாமல் ஏறிட்டவள்,
“சரசு அக்காளுக்கா. சரசு அக்காளுக்கு எதுக்கு பணம்.”
என்றதும் இதுவரை இருந்த முகத்தை மொத்தமாக மாற்றிய திலகா மென் சிரிப்பை முகத்தில் படரவிட்டவாறு,
“அவங்க தானே அவர் கூட இருந்து எல்லா உதவியும் செய்தது. அதுக்காக தான் அவர் அப்பாட்ட சொல்லி காசு வாங்கி கொடுத்ததா சரசு அக்கா எனட்ட வந்து பீத்துச்சு. பாத்தியா. தன்னை கவனிச்சிட்டதுக்கே கட்டு பணம் கொடுக்கிற அளவு கோடீஸ்வரன்.”
என்றவள் சட்டென நினைவு வந்தவள் போல,
“ஆமா இப்போ நீ அவரை பற்றி தெரிஞ்சிக்க வந்தியா. என்னை பற்றி விசாரிக்க வந்தியா?”
என்றதும் சட்டென உதட்டை கடித்து நாணத்தை அடக்கியவள், முகம் முழுவதும் மென்சிரிப்பை படரவிட்டவாறு,
“நான் வந்தது என்னவோ உன்னை பற்றி விசாரிக்க தான். நீ தான் அவரை பற்றி சொல்லிட்டிருக்கா.”
சொல்லி விட்டு சிரித்த ஓவியாவை பார்த்து முறைத்தவள்,
“பாவமா ஒரு மூஞ்சியை காட்டி எல்லாத்தையும் கறந்துட்டு இப்போ நல்லவா வேஷமா போடுறா நீ? உன்னை…”
அவள் அடிக்க கை ஓங்க , எழுந்து ஓடினாள் ஓவியா.
“ ஓட வா செய்யுறா? அப்புறமா அவரை பற்றி கேட்க வருவாலியா அப்ப பாத்துக்கிறேன்.”
“இனி ஏன் நான் உனட்ட வரணும். அதுதான் ஒரு ஆளை கை காட்டிட்டியே. நான் அவங்களுட்டே கேட்டு தெரிஞ்சிக்கிறேன்.”
“நான் கை காட்டுனேனா?”
“இல்லையா பின்ன?”
“யாரு…”
“நம்ம சரசு அக்கா. அவங்களுட்ட போய் கேட்டு தெரிஞ்சிக்கிறேன்.”
என கண் சிமிட்டி கொண்டு ஒட, திலகாவும் சிரித்து கொண்டாள் கூடவே,
“பாத்துடி. அது பணக்கார வர்க்கம்.”
“பாத்துக்கலாம். பாத்துக்கலாம். நீ உன் உடம்பை முதல்ல பாத்துக்க. சீக்கிரம் எழும்பி நடமாட வேணாம். அப்போ தானே ஓடி போற என்னை பிடிக்க பின் தொடர்ந்து வர முடியும்.”
சொன்னவள் கண்சிமிட்டி கொண்டே வெளியேற, போகும் அவளை பார்த்து புன்னகை மாறாமல் இருந்தாள் திலகா. ஆனாலும் அவளின் அடி ஆழத்தில் ஒரு பயம். ஒவியா முகத்தில் இப்படி நாணத்தையும் வெட்கத்தையும் இதுவரை பார்த்திராததால் உண்டான கலக்கமாய் இருக்கலாம்.
ஆனால் நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல் குதூகலத்தோடு தன் அறைக்குள் புகுந்தவள், உள் இருந்த தாயின் குரலுக்கு கூட செவி கொடுக்காமல் பொத்தென பெட்டில் விழுந்தாள். என்னவோ மனதில் புது பொலிவு. கூடவே ஒரு அழுத்தம். அவருக்கு குணமாகி விட்டது என்ற செய்தி சந்தோஷத்தை கொடுத்தாலும். ஒற்றை வார்த்தை பேசாமல் கிளம்பி விட்டார் என்ற செய்தி அவளுக்கு சோர்வை தான் கொடுத்தது. ஆனாலும் மனதின் அடி ஆழத்தில் எதுவோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.
சிலிர்த்து போய் கண்களை இறுக மூடினாள்.
அந்த முதல் நாள் இருட்டில் அவனும் அவளும். அந்த நொடி தான் கண்ணுக்குள் காட்சியாக விரிந்தது. நெஞ்சில் ஒரு படபடப்பு. உடலில் சட்டென பூத்த வியர்வை பூக்கள். இப்போதும் நெருங்கி இருப்பது போன்றதொரு சிலிர்ப்பு.
சட்டென மூடிய கண்களை திறந்தாள்.
உடலும் மனமும் பரவசம் அடைவது போன்றதொரு உணர்வு. அந்த நொடி மட்டும் அல்ல. அன்று இரவு வரை அன்றைய நாள் இருட்டில் அவனும் அவளும் அவளின் பூத்து பூத்து மறைந்தார்கள். கண்களை அப்படியே மூடி அந்த பரவசத்தை அனுபவித்து கொண்டிருந்த நேரம்,
சட்டென அந்த எண்ணம் முளைத்தது.
அவர் கிளம்பிட்டார்ணா. இதுக்க மேல அவரை எப்படி பார்ப்பது. பார்க்கவே முடியாதோ…
மனசு அப்படியே துவண்டு போய் சோர்ந்து விட, சட்டென இரு துளி கன்னத்தில் உருண்டோடியது.
அந்த அழுகையினூடே,
“ஆமா. நான் ஏன் அவரை பார்க்கணும். அவர் குணமாகிட்டாராணு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன்.அதான் திலகா குணமாகி கிளம்பிட்டாருணு சொல்லிட்டாளே, அப்புறம் எதுக்கு இந்த அவஸ்தை. அவர் குணமாகிட்டாரு. இது போதாதா? போதும் தானே. அப்படியும் ஏன் மனசு தவிக்குது. எதுக்கு ஏங்குது. ஏன் பார்க்க துடிக்குது. ஒரு முறை ஒரு முறை என்னை பார்க்காம கிளம்பிட்டாரேனு ஏன் கோபப்படுது. ஆமா அவர் ஏன் பார்க்கணும். எதுக்கு என்னை பார்க்கணும். நிலசரிவு வந்துச்சு. அவர் என்னை காப்பாற்றி மேஜைக்கு அடியில கூட்டிட்டு போய் என் உசுரை காப்பாத்துனாரு. அதுக்கு நாம உரிமை எடுக்க முடியுமா? அது ஆபத்து காலத்துல செய்த உதவி. முடிஞ்சி போச்சு. இதோட அந்த உறவு முடிஞ்சி போச்சு. நீ எதுக்கு இப்போ அங்கலாய்க்குறா. எல்லாம் முடிஞ்சி . அவ்வளவு தான். அவர் உன்னை காப்பாற்றினார். நீ அவருக்கு சாப்பிட உதவுனா அம்புட்டும் தான். இதுக்க மேல ஒண்ணுமில்ல.”
இப்படி ஏதேதோ சொல்லி சொல்லி மனதை சமாதானப்படுத்தி எப்படியோ அந்த பெட்டில் சரிந்தாள். உறக்கம் வரவில்லை. கண்களை மட்டும் தான் மூட முடிந்தது. மனது எதையோ தேடி அலைபாய்வது கொண்டு தான் இருந்தது. அதனாலோ என்னவோ அவளையும் மீறி அழுகை வந்தது. அது எதற்காக வந்தது என காரணம் கேட்டால் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் வந்தது. தாங்க முடியாத அளவு அழுகை பொத்து கொண்டு வந்தது.
ரொம்ப போராடி அடக்கி கொண்டு படுத்திருந்தவள் ஏதோ ஒரு கட்டத்தில் லேசாக கண்ணயர ,
இருள் சூழ்ந்த அந்த பகுதியில் மெல்லிய வெளிச்சத்தில் அவனை நெருங்கி மிக நெருங்கி அவள். காற்று அளித்த பரிசால் அவள் முடி அசைந்தாடி அவள் அழகு முகத்தை அந்த இருளிலும் ஒளிர செய்தது போல் இருந்தது. அந்த மெல்லிய இருளில் அவள் முகத்தில் அவனும் எதை தேடினானோ. ஆனால் கண்டுவிட்ட பூரிப்பும் குறும்பும் அவன் உதட்டில் தெரிந்தது. மெல்ல கண்டு கொண்ட கனியை பறிக்க அவன் இதழ் இவள் இதழ் நோக்கி குனிய நெருங்கிய நேரம்…
அசுரதனமாய் மூச்சை இழுத்து விட்டு விட்டு வாரி சுருட்டி கொண்டு எழுந்து அமர்ந்தாள் ஓவியா…
அவள் இதயம் இப்போது கூட அதிவேகமாக அடித்தது. உடலே தூக்கி தூக்கி போட்டது. ஒரு நொடி கண்மூடி தன்னை ஆசுவாசபடுத்த பார்த்தால் மூடிய கண்ணுக்குள் மறுபடியும் அவனின் குறும்பு சிரிப்பு.
கலைந்து கிடந்த முடியை ஒதுக்கியவாறு, மெல்ல நகர்ந்து அமர்ந்தவள் தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ள பாட்டிலில் இருந்த நீரை எடுத்து பருகினாள். என்னவோ குளிர்ந்த நீர் உள் சென்று அவள் செல்லை குளிர்வித்து அவளை அமைதியாக்க, கண்கள் தானாக மூடிக் கொண்டது.
“ஏன் எனக்கு இப்படி ஒரு கனவு வந்துச்சு. நிஜமாகவே அவர் என்னுள் வந்து விட்டாரா? அதனால் தான் அப்படி ஒரு கனவு வந்ததா? என் மனது அவர் பக்கம் சென்று விட்டதா? அதனால் தான் இந்த அளவு நெருங்கி நின்றாரா?”
“இது எப்படி சாத்தியம். இனி பார்க்கவே முடியாத ஆள் மேல் எப்படி எனக்கு காதல் வந்தது. அவர் நிழலில் கூட நிற்க தகுதியே இல்லாத எனக்கு எப்படி அவர் துணையாகும் ஆசை வந்தது. கடவுளே. இது என்ன அவஸ்தை.”
முற்று பெற்ற ஒரு நிகழ்வுக்கு தொடர்கதை எழுத தன் மனம் விரும்புவதை உணர்ந்தாள். இது நடைபெறவே செய்தாத ஒரு காரியம் என அறிவு சொன்னது. இனி அவனை காணும் சந்தர்ப்பம் கூட உனக்கு கிடைக்க போவது இல்லை என சூழல் சொன்னது. ஆனாலும் மனம் அவனை தூக்கி எறிய முடியாமல் தவித்தது.
யாரிடம் தன் அவஸ்தையை சொல்ல முடியும். எட்டாத காய்க்கு ஆசைபடுகிறாள். அது கைக்கு எட்டும் தூரத்தில் வர போவதே இல்லை என்பது தெரியும். ஆனாலும் பேதை பெண்ணால் அந்த மூன்று நாள் நியாபகங்களை மறக்க முடியாமல் போராடினாள். கண்ணின் ஒரத்தில் நீர் துளி கசிந்தது. அதே நேரம்,
அந்த அறை கதவை திறந்து கொண்டு யாரோ உள் நுழையும் ஒசை கேட்டது.
தாயாக இருக்கும் என்று தான் அவள் கண் திறக்கவில்லை. அதிலும் தளர்ந்து போன அவள் மனது யாரையும் பார்க்க விரும்பவில்லை. வாழ்வே சூன்யமாகி போய் விட்டது போல உணர்வு ஒன்று பந்தாட ,அப்படியே கண் மூடி இருந்தவளை நோக்கியே உள் நுழைந்த காலடி சத்தம் வந்து நிற்க, சட்டென கண் திறந்தாள் ஓவியா.
கண் முன்னே ஒரு விசிட்டிங் கார்டு,
அந்த கார்டை குழப்பமாக பார்த்தவள் அப்படியே அந்த கார்டை சுமந்து நின்ற கையை பார்த்து கடைசியில் மேலேறி முகத்தை சென்றடைந்த போது,
அதிர்ந்து எழுந்தாள்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel