வணக்கம் வாசகர்களே!
இடிபாடுகளுக்கு நடுவில் 3 – நாளாய் மாட்டி கொண்ட முகுந்த் ஓவியாவின் நிலை என்ன ஆனது? அவர்களை தேடி கொண்டு போன நளன் டீம் அவர்களை கண்டுபிடித்தனரா?
ஓவியாவை மொத்தமாக நசுக்கி விட வந்த காங்கிரீட் துண்டை பார்த்து பதறி போய் ஒடி வந்த முகுந்தன் அது அவள் தலையில் விழுந்து விடாமல் தடுக்க போய் அது அவன் தோள்பட்டையை பதம் பார்த்து விட்டு தரையில் போய் விழ, துடித்து போனான் முகுந்தன். உயிர் வலி எடுத்தது. அவன் அடக்க பார்த்தும் முடியாமல் வலி அழுகையாக வெளிப்பட்டு விட,
பதறி துடித்து எழுந்து ஒடி அவன் அருகில் வந்தாள் ஓவியா. கண நேரத்தில் நடந்து விட்ட நிகழ்வின் உண்மை தன்மையை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. பதற்றத்தோடு அவனை பிடித்து அவசரமாக தூக்க முயன்றாள். வலியில் துவண்டு போய் விட்டான் முகுந்த். அவனை அக்கோலத்தில் கண்ட பெண்ணவளின் கண்களுமே கலங்கி விட்டது.
“என்ன காரியம் பண்ணிட்டீங்க. ஏன்… ஏன் இப்படி செஞ்சீங்க. ஐயோ ரத்தம்.”
பதறி துடித்த பெண்ணவளிடம் தன் முறைப்பை காட்டியவன்,
இடிபாடுக்குள்ள இருக்கோம். ஏதாவது பாதிப்பு இருக்காணு பார்க்க மாட்டியா? இடம் கிடச்சா ஒடி போய் உட்கார்ந்திடுவியா?
அவன் அந்த வலியில் கத்திய கத்தல் அவளுக்கு எந்த வலியையோ கோபத்தையோ கொடுக்கவில்லை. மாறாக தாங்க முடியாத வேதனையை கொடுத்தது. அவன் துடித்த துடிப்பை பார்த்த பெண்ணவளின் முகமும் சுருங்கி போனது. தன்னை காப்பாற்ற வந்து அவன் துடிக்கும் துடிப்பை பார்க்க சகிக்கவில்லை. கதறி துடித்த அவன் வலியை எப்படி போக்குவது என்று அவளுக்கும் தெரியவில்லை. ஆனால் பட்ட வேகத்தில் எலும்பு இரண்டு முறிந்திருக்க வேண்டும். கையே உடலில் இருந்து துண்டித்தது போல உயிர் வலி எடுத்திருக்க வேண்டும். அவனால் தாங்க முடியாமல்,
ஆ… என
வாய் விட்டே அவன் கதறி விட்டான். பெண்ணவளும் பதறி போனாள். அவசரமாக அவனை தாங்கி கொண்டவள், அவன் வலியை தான் ஏற்று கொள்ள போராடுவது போல துடித்தாள். அவள் கண்ணுமே ஆறாக பாய்ந்தது. துடித்து போய் தன்னை தாங்கியவளை கண்டதுமே முகுந்தன் தன் வலியை வெளிகாட்டாமல் தனக்குள் அடக்க பார்த்து தோற்று கடைசியில் முகத்தை சுழித்து காட்டி விட,
துடித்துடித்தவளாய் தன் துப்பட்டாவை எடுத்து துடிப்போடு கட்டுப் போட தொடங்கினாள். அழுகையோடு அவள் செய்த செயலில் அவனும் தன் வலியை மறந்து அவளை ஆழமாக பார்த்தான்.
அவள் அவனுக்கு புதிதாக தெரிந்தாளோ என்னவோ அடிப்பட்ட கரத்தை அவள் கையில் கொடுத்து விட்டு அவனுமே அவளின் உதட்டு துடிப்பையே பார்த்து கொண்டிருந்தான்.இப்போது அவள் பார்வையும் அவன் விழியில் இல்லை. அவன் காயங்களை ஆராய்வதிலே இருந்தது. இருந்தது.
காலை வரை திமிர்தனத்தின் உச்சமாய் தெரிந்தவன் இப்போது பச்சை குழந்தை போல் தெரிந்தாள், இதுவரை வேற்று மனிதனாக தெரிந்தவன் தெரிந்தே தனக்காக இந்த வலியை தாங்கி கொண்டு நின்ற பிறகு அடுத்தவனாக நினைக்க முடியவில்லை. காயம்பட்ட இடத்திலிருந்து வடிந்த செந்நீரை தன் துப்பட்டாவின் ஒரு முனையால் துடைத்து சுத்தம் செய்தாள். அவள் சுத்தம் செய்ய செய்ய துடித்த அவனை பார்த்து அவளும் துடித்தாள். பதறினாள். கண்ணீர் வடித்தாள். ஆரம்பத்தில் அவள் மேல் கொலைவெறி உண்டாக கத்தியவன், அவளின் துடிப்பு மிகுந்த கவனிப்பால், வலியை தனக்குள் அடக்கி கொண்டு, மெளனமானான்.
இப்படி மெளனமாவது அவனுக்கு புதிதல்ல. வாழ்வில் இடர் வரும் போது எல்லாம் அவன் நிமிர்ந்து நின்றே பழக்கப்பட்டவன். தன் கஷ்டம் துன்பம் வேதனை எதையும் இதுவரை யாரிடமும் அவன் பகிர்ந்தது கிடையாது. நளன் நண்பன் தான். ஆனால் அவனிடம் கூட அவன் எதையும் பகிர்வது இல்லை. தனக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டு விட்டு அதுலயே வாழ்ந்தவன். இப்படியான பல வலியை தனக்குள் போட்டு அடக்கி இருக்கிறான். ஆனால் இந்த வலி கூட ஏனோ சுகமாக அவனை உணர வைத்தது. தனக்காக ஒவ்வொரு நொடியும் துடிப்பவளை வியப்பு மேலிட பார்த்தான்.
புரியவில்லை. இவள் தனக்காக அழுகிறாளா?
என்று தான் அவனை யோசிக்க வைத்தது. பார்த்த மாத்திரத்தில் இருந்து இந்த நொடி வரை ஒவ்வொரு நொடியும் புதிது புதிதாக தெரிந்தாள். இல்லை என்றால் பெண்களை இந்த அளவு அருகில் நெருங்க விடுபவனே இல்லை முகுந்தன்.
அவனுக்கும் பெண் நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு பழகியும் இருக்கிறான். சங்கீதாவை தவிர வேறு யாரும் அவன் கரத்தை கூட பிடித்தது இல்லை. இன்று அவன் வாழ்வில் எல்லாம் மாற்றம் தான். ஆரம்பத்தில் மோதி கொண்ட நொடியில் இருந்து இந்த நொடி இவளோடு இங்கு இருப்பது வரை நொடிகள் எல்லாம் ஏனோ வித்தியாசமாக நகர்வது போலவே இருந்தது. தாயை போல கரிசனையாக கட்டு போட்டவளையே விழி அகலாமல் பார்த்தான்.
இப்போது அவனில் முக சுருக்கமே இல்லை. ஏனோ காயம்பட்ட இடம் கூட அதிக வலியை கொடுக்காதது போல அமர்ந்திருந்தான்.
அப்படியே நொடி பொழுதில் தன்னை மாறி கொண்ட அவனை வினோதமாக தான் பார்த்தாள். ஆனால் இப்போது அவன் அவளை பார்க்கவில்லை. அவளில் இருந்து நகர்ந்து அமர்ந்தான். என்னவோ மனதில் ஒரு குறுகுறுப்பு ஏறி அமர, நிமிர்ந்து அவளையும் பார்க்கவில்லை.
வலிக்கிறதா?
என நெருங்கவே அவளுக்கு பயமாக இருந்தது.
கொஞ்ச நேரம் கண்மூடி அமர்ந்தவன், பின் மெல்லமாய் எழுந்து கொள்ள,
எங்க போறீங்க…
தயங்கியவாறு தான் கேட்டாள். அவளை முறைத்து கொண்டு முன்னோக்கி நகர முயன்றான்.
அவனை முந்தி கொண்டு முன்னால் சென்றவள்,
நான்… நான் நகர்த்த பாக்குறேன்.
என துணைக்கு வர, ஒதுங்கி வழிவிட்டான் அவன்.
அதே நேரம்.
அஷ்மோரா ஹோட்டல் இருந்த இடத்தை வந்து அடைந்திருந்தது நளன் டீம். ஒரு பொதி உருண்டை மண்ணுக்குள் பாதி புதைந்து பாதி வெளியில் துருத்தி கொண்டு நிற்பது போல இருந்தது அந்த கட்டிடம். அதன் நாலாபக்கமும் இருந்து மலை நீர் பெருக்கெடுத்து பாய்ந்தோடியது. அந்த நீரோடையை கடந்து செல்ல பெரும்பாடுபட்ட அந்த குழு கடைசியில் ஒரு வழியாக, கயிற்றை கட்டி கட்டிடத்தின் முகப்பு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்து சேர்ந்த நேரம்,முன் பக்க சுவர் மழைநீரால் இடிந்து விழுந்தது. நல்ல வேளை அது மறுபுறம் வழியே நீரோடைக்குள் விழ நளனும் வந்தவர்களும் காப்பாற்றப்பட்டார்கள்.
இடிந்து விழுந்த சுவற்றையே பாதையாக்கி மெல்ல மெல்ல நளனின் டீம் உள்ளே நகர்ந்தது. மொத்த பாதையையும் அடைத்து சுவர் அவர்களை முன்னேற விடாமல் செய்ய, மீட்பு படையினரோடு சேர்ந்து நளனும் இடிபாடுகளை அப்புறப்படுத்த தொடங்கினான்.
அதே நேரம்,
“ஏய்… என்ன பண்ணுறா? அதை உன்னால அப்புறப்படுத்த முடியாது. எதுக்கு வீணா மல்லுகட்டிட்டு நிக்குறா?”
தூண் ஒன்றை பிடித்து இழுத்து எப்படியும் அதை அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற முனைப்பில் ஓவியா அதன் ஒருப்பக்கத்தில் நீண்டு நின்ற கம்பியை பலம் கொண்ட மட்டும் பிடித்து இழுப்பதை பார்த்து முகுந்த் வலியிலும் கத்த,
“இதை அப்புறப்படுத்திட்டா உங்களுக்கு சாப்பிட ஏதாவது கிடைக்கும். சார். அதான் முயற்சி பண்ணுறேன்.”
மறுபடியும் முயற்சியை கைவிடாமலே அவள் அப்பாவிதனமாய் சொன்னாள்.
“ நீ இப்போ இதை இழுத்திடுவியா?. வீண் முயற்சி. இதை நகர்த்தவே முடியாது. பேசாம வந்து இதுல உட்காரு. இந்த நைட். இது தான் சரியான இடம். பேசாம வந்து படு. எதையோ செய்ய போய் மறுபடியும் ஆபத்துல மாட்டிக்காத.”
மறுபடியும் அவன் வலியில் முகத்தை கோணியவாறே கத்த. பெண்ணவளோ முயற்சியை கைவிடாமல் இப்போதும் அந்த கம்பியை பிடித்து இழுக்க போராடி கொண்டே இருந்தாள்.
“சொன்னா கேட்க மாட்டா. பேசாம வந்து இதுல உட்காரு.”
கர்ச்சித்தவனை திரும்பி பார்த்து அப்பாவிதனமாக முகத்தை வைத்து கொண்டே,
“நீங்க இருக்க சார். இந்த கம்பியை மட்டும் கொஞ்சம் நீக்கிட்டேனா… காலையில் உங்க அறைக்கு கொண்டு வந்த உணவுல ஏதாவது சாப்பிட கிடைக்கும்.”
என்றவளை கோபமாக முறைந்தவன்.
“ம்…ம்… கிடைக்கும். கிடைக்கும். இந்த இடிபாடுக்குள்ள சிதைஞ்சி சின்னாபின்னமாயிருக்கும். உன் அதி புதிசாலிதனத்தை காட்டாம பேசாம வந்து உட்காரு. என்னால பேச முடியல.”
“இல்ல சார்…”
அவள் ஏதோ சொல்ல முயல,
“சும்மா இருணா இருக்க மாட்டியா? உன்னால ஒரு பக்க கையே போச்சு. மறுபடியும் எதையாவது இடிச்சி தலையில போட்டு ஒரேயடியா அனுப்பி வச்சிடாத.”
என்ற அவனின் கர்ச்சனைக்கு பயந்து மறுபடியும் அவன் அருகில் வந்து பயத்தோடு அமர்ந்தவளாக அவனை பரிதாபமாக பார்க்க,
“பெரிய ஜான்சிராணிணு நினைப்பு,
முனங்கியவனை கீழ் பார்வை பார்த்தவள் மறுபடியும் தலையை தாழ்த்தி கொண்டு உட்கார்ந்து விட, முகுந்த் வலியில் முனங்க ஆரம்பித்தான். அவன் தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது.
“ஐயோ… ரத்தம்… ரத்தம்…”
மறுபடியும் அவள் எழுந்து ஒடி வர, அவளை விரல் உயர்த்தி எச்சரித்தவன் தன் சட்டையை மெல்ல கழற்றி அந்த காயத்திற்கு கட்டிட்டான். அவன் கட்டிட கட்டிட ரத்தம் வடிந்து கொண்டே இருக்க, பெண்ணவளால் பதறாமல் இருக்க முடியவில்லை. அவளை கண்களால் அடக்கியவாறு ரத்தம் வெளியேறாமல் அணை கட்டியவன் ரொம்பவே சோர்ந்து போய் சுவரில் சாய்ந்து அமர்ந்தான்.
நேரம் ஆக ஆக முகுந்த்துக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. இன்னும் சற்று நேரத்தில் தான் சுயநினைவை இழக்கப் போகிறோம் என்பது உறுத்த பெண்ணவளை இயலாமையோடு பார்த்தவன். அப்படியே தன்னை மொத்தமாக இழந்து கீழே சரிந்து அவள் தோள்பட்டையில் மூச்சிறையானான்.
பதறி துடித்து அவனை தாங்கி கொண்டவள்.
“ஐயோ… கண்ணை மூடாதுங்க சார். எனக்கு பயமா இருக்கு சார்… பிளீஸ்சார்…”
என வாய்விட்டு கதறிய அதே நேரம்,
விடாத மழையையும் பொருட்படுத்தாது நனைந்து கொண்டே அந்த கட்டிடத்தில் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது நளனின் டீம். மீட்பு பணியில் தொய்வு ஏற்பட காரணமே இந்த விடாத மழை தான். கூடவே வழியில் இவர்கள் மீட்டெடுக்கும் மனிதர்களை ரொம்ப தொலைவு கொண்டு போய் சேர்க்க வேண்டி இருந்ததால் நளனால் முகுந்த் இருக்கும் பக்கம் கூட வர முடியவில்லை. அந்த கட்டிடத்தின் முகப்பில் இருந்து நளனுக்கு அவ்வளவு இடையூறு. அந்த கட்டிட இடிபாடுகளை அகற்றி முன்னேறுவது அவ்வளவு கடினமாக இருந்தது. இந்த இடிபாடுகளின் நடுவில் அவனை எங்கு போய் தேடுவது. நளன் தலையை பிய்த்து கொண்டிருந்த நேரம் ஒரு தீனமான குரல் அவன் செவியை வந்தடைய சட்டென திரும்பி பார்த்தான். இடிந்த தூணுக்கு அடியில் இரண்டு கால்கள் தெரிந்தது.
சரவணன். பின்னால பாருங்க…
என நளனின் கத்தல் குரல் கேட்டு சரவணன் திரும்பி பார்த்த இடத்தில் ஒரு பெண் குற்றுயிரும் கொலை உயிருமாக இருக்க கண்டதும் மொத்த மீட்பு படை குழுக்களும் அந்த தூணின் பக்கம் சூழ்ந்து கொள்ள, அந்த தூணை அப்புறப்படுத்தி விட்டு அந்த பெண்ணை தூக்கி வந்த போது தான் நளன் அந்த பெண்ணையே பார்த்தான்.
பார்த்த நொடி அவன் கண்கள் அதிர்வோடு கலங்கி விட்டன. அவள் இரண்டு காலும் மொத்தமாய் சிதைந்து முகம் முழுவதும் ரத்த சிதறல்கள். உயிர் இருந்தாலும் உணர்வு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண் தன்னை இழந்து இப்போது மொத்தமாய் நினைவிழக்க போகும் நேரம் காப்பாற்றப்பட்டிருந்தாள்.
சரவணனும் இன்னும் இரண்டு பேரும் தூக்கி கொண்டு போக முனைந்த போது, உடலின் குலுக்கலால் தன் உணர்வு வந்தவள் போல லேசாக கண் திறந்த அந்த பெண்ணவளின் பார்வையில் அதிர்ந்து நின்ற நளன் தெரிய, ஒரு நொடி ஒளி பெற்ற அவள் கண்கள் மெல்ல மெல்ல மூடி கொண்டது.
சட்டென தன்னை மீறி பாய்ந்த கண்ணீரை துடித்து கொண்டான் நளன். அதற்கு மேல் உணர்வை அவனால் காட்ட முடியவில்லை. முகுந்த். அவனை காப்பாற்றியாக வேண்டும். எப்படியாவது காப்பாற்றியே ஆக வேண்டும். கடவுளே என் நண்பனுக்கு எந்த ஆபத்தும் வந்திருக்க கூடாது. வேண்டிவன் அவன் இப்போது என்ன நிலமையில் இருக்கிறானோ என்ற எண்ணமே மனதில் பேயாட்டத்தை விதைக்க, தூக்கி சென்ற திலகாவை ஒரு நொடி திரும்பி பார்த்து விட்டு முன்னோக்கி நகர்ந்தான்.
அதே நேரம்,
மொத்தமாய் உணர்விழந்து தன் மேல் விழுந்து கிடந்த முகுந்தை பயத்தோடு உலுக்கினாள் பெண்ணவள். அவனில் எந்த அசைவும் இல்லை. பயம், பதட்டம். அவளை எதுவும் செய்ய விடாமல் சிறைபடுத்தி இருக்க, வாய் விட்டு கதறினாள் ஓவியா.
“உங்களுக்கு என்னாச்சுங்க. எனக்கு பயமா இருக்கு. எழும்புங்க. பிளீஸ் எழும்புங்க.”
என அவன் மார்பு கூட்டை அவள் உலுக்க, முகுந்தன் உடம்பில் எந்த அசைவும் தெரியவில்லை. மூன்று நாள் உணவு இன்றி தண்ணீர் இன்றி தாங்கி கொண்டதே பெரிசு. இந்த லட்சணத்தில் அடிப்பட்டு ரத்தம் கூட போய் இருக்கிறது. சோர்ந்து தளர்ந்து போய் விட்டான் முகுந்தன்.
உங்களை நான் எப்படி காப்பாற்ற போறேன். ஐயோ… கடவுளே… எங்களுக்கு உதவி செய்ய மாட்டியா?
பயந்தவாறு அங்கும் இங்கும் ஓடினாள். சுற்றி மண் குவியல்கள். எந்த பக்கம் நகர்த்த முடியும் என்றும் தெரியவில்லை. இவரை இப்படியே விடவும் முடியாது. இதற்கு மேல் இங்கு அடைப்பட்டு இப்படியே கிடந்தால் இவர் உயிரோடு இருக்க மாட்டார் என்பதும் தெரிந்தது. பெண்ணவளுக்கு பதட்டம். நாலாபுறமும் ஓடினாள். அவனை காப்பாற்றி விட வேண்டும் என தவியாய் தவித்தாள். அப்போது தான் தான் கம்பியை இழுக்க போராடி, முடியாமல் கடைசியில் முகுந்தனின் அதட்டலால் விட்டு போன இடம் நியாபகத்துக்கு வந்தது. நிச்சயம் அந்த இடத்தை நகர்த்தினால் தப்பிக்க வழி கிடைக்காவிட்டாலும் குடிக்க நீரும் உண்ண ஏதாவது பழமும் கிடைக்கும் என தோன்றியது.
அவசரமாக அத்திசையை நோக்கி ஓடினாள்.
அதே நேரம்,
சோர்ந்து தளர்ந்து போய் தண்ணீர் ஒடிக் கொண்டிருந்த பாறையின் மேல் பொத்தென அமர்ந்து விட்டான் நளன். அவனும் காலையிலிருந்து இரவு வரை அன்ன ஆகாரம் எடுக்காமல் தேடி விட்டான். முகுந்தன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கவே முடியவில்லை. அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் வந்தும் அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் தான் அப்படி சோர்ந்து போய் அமர்ந்தான். கடைசியாக சரவணன் தான் அவனை வற்புறுத்தி அழைத்து கொண்டு கீழே வந்தான்.
கீழே அவன் மொத்த குடும்பமும் இவர்கள் வருகைக்காக மலையடிவாரத்தில் காத்து நின்றது. மூன்று நாள் முழுதாய் முடிந்தும் தன் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற போது சக்கரவர்த்தியே துவண்டு தான் போனார். இந்த மூன்று நாளாய் அவரும் இங்கே தான் நிற்கிறார். தன் பணபலத்தை வைத்து அவரும் என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார். ஆனால் மகனை மீட்டு கொண்டு மட்டும் யாரும் வரவில்லை.
அதே நேரம் அந்த கும்மிருட்டுக்குள் ஓவியாவை அணைத்து கொண்டு நடுங்கி கொண்டிருந்தான் முகுந்தன். வலியில் அவனுக்கு ஜுரமே வந்து விட்டது. போராடி போராடி ஓவியா சோர்ந்து போய் அப்படியே வந்து அவன் அருகில் இருந்தாள். முகுந்தன் சொன்னது போல அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. தளர்ந்து போய் வந்தவளை தான் உடல் சூட்டின் உஷ்ணத்தால் அணைத்திருந்தான் முகுந்தன். அவன் உடல்சூட்டை பார்த்து பதறியவள் அணைத்த அவனை பரிதாபமாக பார்த்தாள். அவன் தன்னிலையில் இல்லை என்பது அவளுக்கு தெரிந்தது. உடல் சூட்டில் உடம்பு தூக்கி தூக்கிப் போட்டது. அவனை அணைப்பதை தவிர அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.அவனுக்கு தன் உடலை கொடுத்து விட்டு அவன் அருகில் கண்மூடி படுத்திருந்தாள் பெண்ணவள், நேரம் ஆக ஆக அவனில் அசைவு இல்லாதது போல உணர்ந்தாள். பயம் நெஞ்சை கவ்வியது. தன் உயிரை காப்பாற்றியவன் உயிர் போய் விட கூடாது என்று தன்னில் கிடந்தவனை அப்படியே தரையில் படுக்க வைத்து விட்டு மறுபடியும் போராட ரெடியானாள்.
நான்காம் நாள் காலை. மீட்பு படை வீரர்கள் காலையிலே மும்முரமாகி விட்டார்கள். ஆனால் நளன் சோர்ந்து போயிருந்தான். காரணம் திலகாவை மீட்டு சென்ற பிறகு அந்த கட்டிடத்தில் ஒரு உயிர் கூட அவனுக்கு உயிரோடு கிடைக்கவில்லை. தன் தோழன் உயிரோடு கிடைப்பான் என்ற நம்பிக்கையே சுத்தமாக அவனுக்கு போய் விட்டது. என்றாலும் இடிபாடுகள் நடுவில் அவனை பார்த்து விட மாட்டோமா என பரபரத்தான்.
அதே நேரம் இன்டர்காம் அவனை அழைக்க, போலீஸ்காரர் ஒருவர் அவன் கையில் கொடுத்தார்.
“உங்க பாஸ்…”
என்றதும் அவசரமாக அதை வாங்கியவன்.
“சொல்லுங்க சார்.”
“நளன். அந்த ஹோட்டலில் இருந்து கால் ஒடிந்து ஒரு பொண்ணை தூக்கிட்டு வந்தீங்களே, அந்த பொண்ணுக்கு நினைவு திரும்பிச்சி. அது உனட்ட ஒண்ணு பேசணும்னு சொல்லு.”
என்றதும் பரபரப்பானவன்.
“என்னிடம் சார்…”
அவசரமாக கேட்டான்.
“ஆமாப்பா. அந்த பொண்ணு அந்த ஹோட்டல்ல மூணு வருஷமா வேலை பாக்குதாம். அதுக்கு அந்த இடம் பற்றி முழுசா தெரியுது. ஆனா கூட்டிட்டு போய் உங்களுக்கு உதவ முடியாத நிலையில இருக்கு. காலு இரண்டும் மொத்தமா சிதைஞ்சி போயிருக்கு. அதான் போனுல உங்களுக்கு வழிகாட்ட விரும்புது.”
என்றதும் சட்டென விழுந்த கண்ணீரை சரசரவென துடித்தவன்,
“கொடுங்க சார்…”
என சொல்லவும், போன் திலகா கைக்கு மாறியது.
“சார்… நீங்க என்னை மீட்டெடுத்த இடம் உங்களுக்கு நியாபகம் இருக்கா…”
என்றாள் தளர்ந்து போன குரலில். அவள் குரல் செவிப்பறையை தீண்டியதுமே விறைத்து போன உடலோடு,
“ஆமா…”
என்றான் உடைந்து போனவளாய்…
“அதுல இருந்து இடது பக்கம் ஒரு இருபது இருபத்தைந்து அடி எடுத்து வைங்க. நிச்சயம் அது பக்கத்துல தான் ஓவியா இருப்பா.”
“ஓவியாவா ? அது யாரு? இப்போ அவளை தேட தான் போன் அடிச்சியா?”
சக்கரவர்த்தி கொதித்து போய் கேட்க,
“அவசரப்படாதுங்க சார். நீங்க உங்க மகனை காப்பாற்றணும்ணா ஓவியா இருக்கிற பக்கம் தான் போகணும். இந்த அசம்பாவிதம் நடக்கிறதுக்கு இரண்டு நிமிஷத்துக்கு முன்னால தான் ஓவியா உங்க மகனுக்கு டிபன் எடுத்துட்டு அவர் அறைக்கு போனா. ஒருவேளை அவா வராண்டாவுல மாட்டியிருக்கலாம். இல்ல உங்க மகன் தங்கி இருந்த அறையில மாட்டி இருக்கலாம். எங்க இருந்தாலும் அவளோட பக்கத்துல தான் உங்க மகனும் இருக்கணும்.”
என்றதும் சக்கரவர்த்தி சட்டென திலகா கையில் இருந்த போனை வாங்கி,
“கேட்டுச்சா நளன். இடது பக்கமா ஒரு இருபது அடி தூரத்துல சீக்கிரம் சீக்கிரம்…”
என அவசரப்படுத்த,
“என் தோழியையும் எனக்கு மீட்டு கொடுத்திடுங்க சார். பிளீஸ் சார்…
கண்ணீர் மல்க கை கூப்பி நின்றவளை ஒரு நொடி அமைதியாக பார்த்த சக்கரவர்த்தி மறுபடியும் செல்லை காதில் வைத்தவாறு நகர்ந்த,
அதே நேரம்,
முகுந்தை தன் மடியில் தூக்கி போட்டு கொண்டு தன் உடலை கிழித்து போராடி எடுத்து வந்த நீர் பாட்டிலில் கொஞ்சமாய் இருந்த நீரை அவன் முகத்தில் அறைந்தாள் ஓவியா. முகத்தில் ஜில்லென்று பட்ட நீரில் முகுந்த் நெற்றிகள் சுருக்கம் கண்டது. இப்போது தான் ஓவியாவுக்கு போன உசுரே வந்தது. அவனை தாங்கி பிடித்து மீதி இருந்த நீரை அவனுக்கு கொடுத்த போது தான் அவள் தோள்பட்டையில் இருந்து செந்நீர் உருண்டோடி வருவதை அவனுமே பார்த்தான். ஆனாலும் பேச முடியவில்லை. அவள் அவள் வலியை பெரிதுபடுத்துவது போல் கூட தெரியவில்லை. இவனை எழும்பி உட்கார வைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒட்டி கொண்டிருந்த மண்களை அப்புறப்படுத்தியவாறே போராடி சம்பாதித்து வந்த ஆரஞ்ச் பழத்தையும் நைந்து போயிருந்த ஆப்பிள் பழத்தையும் சுத்தப்படுத்தி அவன் வாயருகே கொண்டு சென்றாள்.
கலங்கிய கண்களோடு துடித்த உதடுகளோடு தன்னை காப்பாற்ற போராடி தவிக்கும் பெண்ணவளை உணர்ச்சி துடைக்கப்பட்ட முகத்துடன் பார்த்தவன் சட்டென கண்களை மூடி உதட்டை திறக்க, இப்போது ஓவியாவின் கரத்தில் இருந்த அந்த அழுக்கேறிய ஆப்பிள் பழம் அவன் வாய்க்குள் சென்றது.
அதே நேரம் நளன் திலகா சொன்ன பக்கமாக முன்னேறி வந்து கொண்டிருந்தான். திலகா வழி காட்டிய பின் ஒரு இடத்தில் கூட அவன் சோர்ந்து போகவில்லை. மிக மிக வேகமாக முன்னோக்கி வந்தான். என்றாலும் ஒரு மனிதன் கூட அதன் பிறகு உயிரோடு மீட்கப்படாதது அவளுள் கலவரத்தை உண்டு பண்ணியது. கூடவே வழிகள் பெரிய பெரிய காங்கிரீட் துண்டுகளால் இடை மறித்து நிற்க, அதை எல்லாம் அப்புறப்படுத்தவே பல மணி நேரமாகி விட்டது. கடைசியாக அவர்கள் ஒரு சரிந்து கிடந்த தூணின் பக்கத்தில் வந்தனர்.
சார். இன்று இந்த தூணை அப்புறப்படுத்த முடியாது. நேரம் இருட்டிடுச்சி. பேசாம நாளைக்கு காலையில வரலாம்.
உடன் வந்திருந்ததில் ஒருவன் சொல்ல,
இல்ல. எங்களோட சின்ன முதலாளி எப்படி எந்த சூழல்ல இருக்கிறார்னு தெரியல. இதுக்கு மேல நேரம் கடத்த முடியாது. அந்த பொண்ணு சொன்னது இந்த இடம் தான். இந்த தூணை அப்புறப்படுத்திட்டா நிச்சயம் முகுந்த் இருக்கிற இடம் வந்திடும்ணு நினைக்கிறேன். ஒரு முயற்சி செய்து பார்ப்போம்.
என்றவுடனே கூட்டம் அந்த தூணை சூழ்ந்து கொள்ள, சரவணன் சொன்னது போல அந்த இருட்டு வேளையில் அதை அப்புறப்படுத்துவது இயலாத காரியமாகவே இருந்தது. ஆனாலும் நளன் பின்வாங்கவில்லை. உடன் வந்திருந்தவர்களை விரைவாக அதட்டி அந்த தூண் அப்புறப்படுத்தினான். தூணுக்கு பின் ஒரு கதவு இருந்தது. சிதைந்து போயிருந்த அந்த கதவை பலம் கொண்ட மட்டும் திறக்க முயன்றான். அது நான் வழிவிடுவேனா என்பது போல அடம்பிடித்தது. அதையும் ஒரு பெரும் போராட்டத்திற்கு பின் நகர்த்தி மெல்ல உள் நுழைந்தான் நளன்.
உள் வந்தவன் கண்ணுக்கு மறுபடியும் ஒரு காங்கிரீட் சுவரே தெரிந்தது. சோர்ந்து தளர்ந்து போய் அவன் அதில் அமர்ந்து விட, கூட்டம் முணுமுணுப்போடு கீழ் இறங்கியது. அன்றைய இரவு நளன் அவர்களோடு செல்லவில்லை. அவனால் செல்ல முடியவில்லை. என்னவோ மனது முகுந்தன் மிக அருகில் உயிருக்கு போராடி கொண்டிருப்பது போலவே எண்ணம் உதித்தது. இரவு முழுதும் அவன் தனிமனிதனாய் சுவற்றை அப்புறப்படுத்த போராடி விடியற்காலையில் தன் முயற்சியில் வெற்றி கண்டு, குடைந்து வைத்திருந்த ஓட்டை வழி உள் நுழைந்த போது,சரியாக தூரமாய் சுவரில் சாய்ந்து தலையை ஒரு பக்கமாய் தொங்க போட்டவாறு இருந்த முகுந்தன் கண்களில் விழுந்தான். பூரிப்பும் அழுகையுமாக அருகில் ஒடி வந்தான். தன் நண்பனை கண்டுவிட்ட மகிழ்வில் வந்தவன் கண்ணில்,
ஒரு பெண்ணின் தோளில் மேல் சாய்ந்து முகுந்தன் தூங்கி கொண்டிருப்பது தெரிய, குழப்பத்தோடு நெருங்கி அவர்கள் அருகில் வந்தான். வந்தவன் கண்ணுக்கு அது ஒவியா என்பது தெரிய, ஒரு நொடி திலகாவின் முகம் அவனுள் வந்து போனது. அவளும் தூங்குவது போல் கண் மூடி தான் இருந்தாள். ஆரம்பத்தில் இருவரும் தூங்குகிறார்கள் என்று தான் நினைத்தான். ஆனால் அருகில் சென்று அவர்களை அசைத்த போது தான் இருவருமே அடிசாய்ந்து கீழே விழ கண்டதும் துடித்துப் போனான் நளன்.
அத்தியாயம் தொடரும்…
Best Romantic Novel